தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 5, 2008

தென்காசி குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள RSS, BJP முக்கிய புள்ளிகளை கைது செய்ய TMMK கோரிக்கை

Filed under: B.J.P, Riyadh TMMK, rss, terrorists, Thenkasi — முஸ்லிம் @ 8:06 முப
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த நெல்லை காவல்துறையைப் பாராட்டுகின்றோம். மாநிலம் தழுவிய முக்கியப் புள்ளிகளையும் விசாரிக்க வேண்டும்.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை


கடந்த ஜனவரி 24 அன்று தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டு வெடித்ததாக செய்தி வெளியானது. அப்போதே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று கூறினோம். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டியிடம் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.

இந்நிலையில், நெல்லை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட சங்பரிவார் பிரமுகர் குமார் பாண்டியனின் தம்பி ரவியும் ஒருவர். இவர் இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.

தங்கள் கொள்கையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இவர்களே குண்டுகள் மூலமாகத் தாக்கி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட இக்கும்பல் திட்டமிட்டிருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. சமூக அமைதியைக் குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே இவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் குண்டு வெடித்த இடத்தில் கிடைக்கப் பெற்ற வெடி மருந்துகளும் இப்போது தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும் ஒரேமாதிரியாக இருப்பதாக டி.ஐ.ஜி கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.

எனவே, ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபடும் மத்திய புலனாய்வு குழு தமிழக காவல்துறையிடமிருந்து தென்காசியில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து தடயங்களைப் பெற்று அவ்வழக்குத் தொடர்பாக மறு விசாரணையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இக்கும்பலுக்கு பின்னணியில் வேறு பலமான சக்திகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றோம். எனவே இது குறித்து மாநில அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளின் முக்கியப் புள்ளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வேலை கொடுக்காமல் துரிதமாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட நெல்லை காவல்துறையை பாராட்டுகின்றோம். தொடர்ந்து இவ்வழக்கை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.

சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தென்காசி RSS அலுவலக குண்டுவெடிப்பு – 3 தீவிரவாதிகள் கைது

Filed under: rss assault, terrorists, Thenkasi, TMMK — முஸ்லிம் @ 7:57 முப
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்த தீவிரவாதிகள் சிக்கினர் குமாரபாண்டியனின் சகோதரர் உட்பட 3 பேர் கைது உலுக்கும் உண்மைகள் அம்பலம் – நமது செய்தியாளர்

கைது செய்யப்பட்ட RSS தீவிரவாதிகள்

தென்காசியைக் குறிவைத்து சங்பரிவார் சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு அமைதிக்கு கேடு விளைவித்து வருவதை நாட்டு மக்கள் வேதனையோடு கவனித்து வருகின்றனர்.

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு பொறுக்காத தேச விரோத சக்திகள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக தென்காசி மக்களின் நிம்மதியைக் குலைத்த கும்பலின் சதிச்யெல் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கடந்த 24ல-01-2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என கருதியிருந்தால் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இயங்கும் நேரத்தில் அதை செய்திருக்கலாம். அலுவலகம் பூட்டப்பட்ட பிறகு பொதுவாக அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இச்சம்பவம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்ட செயலாகவே இதை நாட்டிலுள்ள நல்லோர் கருதினர்.

ஊடகங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின. ஜெயா டி.வி, விண் டி.வி போன்ற சேனல்கள் தங்கள் செய்திகளின் மூலமாக பதட்டத்தை குறைய விடாமல் பார்த்துக் கொண்டன.

திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என திட்டமிட்டு பிரச்சாரங்களை நடத்தினர். இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் தென்காசிக்கு வந்து முஸ்லிம்கள் குறித்து அவதூறுகளை அள்ளி வீசினார்.

மீண்டும் மீண்டும் அப்பாவிகள் துன்பறுத்தப்பட்டனர். விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு விவகாரம் சிபிசிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமுமுக கோரியது.

இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்தாக முன்னாள் இந்து முண்ணனித் தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து அப்பாவி முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி தமிழகத்தை கலவரக்காடாக்க முயற்சித்த கொடிய சதி அம்பலத்துக்கு வந்துள்ளது.

நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வைத்தோம் என அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது இதழ் அச்சேறும் முன்பாக முதலில் வந்த தகவலின்படி 1) குமார பாண்டியனின் தம்பி ரவி, 2) கே.டி.சி. குமார், 3) செங்கோட்டை லட்சுமி நாராயண சர்மா என்ற மூன்று பேரின் பெயர் தெரிய வந்துள்ளது.

அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை அமளிக் காடாக்கும் சங்பரிவார சதிச் செயல் அம்பலமாகியுள்ளது.

திமுக ஆட்சி வந்தாலே தீவிரவாதிகள் அராஜக ஆட்டம் தொடங்கி விடும் என ஜெயலலிதா, ராமகோபாலன், சோ, இல.கணேசன் போன்றவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அவர்கள் இத்தகைய தீவிரவாதி களைத்தான் கூறியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

சங்பரிவாரின் தொடர் சதிகள்

அரசும், காவல்துறையும், உளவுத் துறையும் இந்த கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சங்பரிவார் தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

முன்கூட்டியே சதிகளை திட்டமிட்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தும் சங்பரிவார் சக்திகளைக் குறித்து நடுநிலையாளர்கள் பல்லாண்டுகாலமாக கூறிவருவதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

24 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வெடித்ததாக தகவல் வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக 22.01.2008 அன்று நாட்டு வெடிகுண்டுகளுடன் செல்லச்சாமி என்பவர் பிடிப்பட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தென்காசி ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சதிசெய்தவர்களின் பிண்ணனியில் இருந்தவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையாகும்.

தேசத் தந்தை காந்தியாரின் படுகொலை

பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸில் சங்பரிவாரத்தினரே தீவைத்து விட்டு குஜராத்தில் பெரும் இனப்படுகொலையை நடத்தியது.

மகாஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் பஜ்ரங்தள் அலுவலகத்தில் வெடிகுண்டு தொழிற்சாலையில் குண்டுவெடித்ததும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் தொப்பிகள் மட்டுமின்றி ஒட்டுத்தாடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. போன்ற சதிகளில் சங்பரிவரத்தினரின் சதிகள் தோலுரிக்கப்பட்டன.

தற்போது தென்காசியிலும் சங்பரிவாரத்தினரின் முகமூடி தோலுரிக்கப்பட்டது.
உண்மைகளை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்.

உளவுத்துறை முகத்தில் கரிபூச முயன்ற கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் வேண்டுகோளாகும்.

தமுமுக ஏற்படுத்திய நெருக்கடிகள்

தென்காசியில் அமைதி திரும்ப வேண்டும் என்பதிலும் அமைதியை குலைக்கும் தீவிரவாத சக்திகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பதிலும் உண்மையாக தமுமுக தொடர்ந்து தீவிரக் கவனம் செலுத்தியது.

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜனவரி 27 அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி ஜனவரி 29 அன்று குமரி மாவட்டம் இரவிபுதூர் கடையிலும், இறுதியாக மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி பிப்ரவரி 3 அன்று நெல்லை மாவட்டம் தென்காசிக்கு வருகை தந்து புளியங்குடியிலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தினர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவை என்ற வேண்டுகோள் பத்திரிக்கைகளில் முக்கிய செய்திகளாக வந்து காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் உனவுத்துறை ஐ.ஜி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

அதன் விளைவாக நெல்லை காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றது. டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர், தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒத்துழைத்த காவலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

தொடர்புடையவை : தினமலர் பத்திரிகை செய்தி

நவம்பர் 14, 2007

தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…

Filed under: தீவிரவாதம், தென்காசி, Thenkasi — முஸ்லிம் @ 2:31 பிப
தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…உண்மை அறியும் குழு அறிக்கை!

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்

தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புதுவை கோ.சுகுமாரன் தவிர இளம் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த் (சென்னை), சீனி சுல்தான் (சென்னை), மனோகரன் (சென்னை), தமயந்தி (சேலம்), செங்கொடி (சென்னை), பொற்கொடி (மதுரை) ஆகியோர் தவிர, கோவை வெடிகுண்டு வழக்கில் வாதிட அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்துர் ரஹ்மான் அகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

சென்ற செப்டம்பர் 7ஆம் தேதியன்று தென்காசி சென்றிருந்த இக்குழு இருதரப்பிலும் பலரையும் சந்தித்துப் பேசியது. கொலையுண்ட நாகூர் மீரானின் மனைவி பிர்தவ்ஸ் (18), பஷீரின் மனைவி மும்தாஜ் (19), கொலையுண்ட குமார் பாண்டியன், செந்தில் முதலானோரின் சகோதரர்கள் சீனிவாசன், மகாதேவன் ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். தென்காசி நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களையும் சந்தித்தோம். முன்னதாக வழக்கறிஞர் தமயந்தியும் அவரது உதவியாளர்களும் சேலம் சிறையில் நீதிமன்றக் காவல் உள்ளவர்களைச் சந்தித்துத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

தென்காசி முழுவதும் போலீஸ் கெடுபிடி இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. கூடியவரை ஒவ்வொரு தெருவிலும் இரு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. காவல்துறை ஒரளவு முன்எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது.

1982-ல் நடைபெற்ற மதமாற்றத்தின் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மீனாட்சிபுரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் தென்காசி. அன்று முதல் இந்துத்துவ சக்திகளின் கவனம் பெற்ற ஊராகவும் இது உள்ளது. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட எல்.கே.அத்வானி திருநெல்வேலிக்கு வருகை புரிந்துள்ளார்.

பொதிகை மலை அடிவாரத்தில் குற்றால அருவிக்குச் சில கல் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரில் நெடுங்காலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் தொகையில் சுமார் 40 சதம் பேர் முஸ்லீம்கள். இங்குள்ள 13 ஜும்மா மசூதிகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 3,000 பேர் என கொண்டாலும் தென்காசியிலுள்ள மொத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 40,000 இருக்கலாம். பெரும்பாலும் சிறு, நடுத்தர வியாபாரிகளாக உள்ளனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரே பெரு வணிகர்களாகவும், சிறு தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

1967-ல் நடைபெற்ற மொகரம் ஊர்வலம் ஒன்றின்போது முதன்முதலில் சிறு கலவரம் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து தென்காசியில் அந்த ஊர்வலம் நடப்பதில்லை.1974-ல் நகர் நடுவில் கடைத்தெருவில் கோயிலருகில் உள்ள பொதுத் திடல் ஒன்றில் திடீரென ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில நாட்களில் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த கீற்றுப் பந்தல் ஒன்று கொளுத்தப்பட்டிருக்கிறது. சிலையை வைத்தவர்களே அதைக் கொளுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சந்தர்ப்பத்திலும் கலவரம் மூண்டுள்ளது. பின்னர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தற்போது கொலையுண்ட இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவருக்கு இச்சம்பவம் ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகவும், தமது தந்தை அதைத் தடுக்க முனைந்தபோது கலவரம் மூண்டதாகவும் சொர்ணத் தேவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர். அனால் அவரே ஊர்வலத்தைத் தடுத்து கலவரம் புரிந்ததாக மற்றவர்கள் கூறினர்.

இதுதவிர கடைத்தெருவில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று தொடர்பாகவும் பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சுமார் 200 அடிகள் தள்ளி அமைந்துள்ள இந்த “பஜார் பள்ளி”க்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடைகளுக்கு மத்தியில் உள்ளடங்கிய கூரையும், ஒடும் வேய்ந்த அந்தச் சிறு கட்டடம் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கடைத்தெருவில் வணிகம் புரியும் முஸ்லீம்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களிருந்து பொருட்கள் வாங்க வருவோர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை செய்வதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. மினாராக்கள், அலங்காரங்கள் ஏதுவுமின்றி சிறிய அளவில் இப்பள்ளியைச் சீர்திருத்த சில அண்டுகள் முன்பு முஸ்லீம்கள் முனைந்துள்ள போது இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியன் அதை எதிர்த்துள்ளார். கூரையை மாற்றி கான்க்ரீட் தளம் அமைக்க மட்டுமே முனைந்த முஸ்லீம்கள் மாவட்ட அட்சியர் நிரஞ்சன் மார்டினிடம் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்த போதிலும் இந்து முன்னணியின் ஆட்சேபனையால் இன்றுவரை அப்பணி நடைபெறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் (1992) இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் டிசம்பர் 6-ஐ துக்க தினமாக நினைவு கூர்வதை நாம் அறிவோம். இங்கும் அந்த வழக்கம் இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதுதொடர்பாக முஸ்லீம்கள் தட்டிகள் வைத்தபோது அப்போதிருந்த காவல்துறை அய்வாளர் சக்ரவர்த்தி அதை நீக்குமாறும் தட்டிகளுக்கு ஏதும் அபத்து வந்தால் தான் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளார். அடுத்தநாள் தட்டிகள் எரிக்கப்பட்டுள்ளன. தவிரவும் குமார் பாண்டியனும் இந்து முன்னணியினரும் டிசம்பர் 6 அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். முஸ்லீம்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டு ஆத்திரம் மூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்ற டிசம்பர் 17, 2006-ல் குமார் பாண்டியன் கொல்லப்- படுகிறார். இதுதொடர்பாக அனீபா, முருகேசன் (எ) அப்துல்லா, சுலைமான் என்கிற சிறுவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். அரசு துரித நடவடிக்கைகள் எடுத்தபோதும் கலவரமும் இருந்தது. ஒரளவு அமைதி திரும்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் மீது கொலைவெறித் தாக்குதல் ஒன்று மார்ச் 2-ம் தேதி (2007) நடைபெற்றது. கடும் தாக்குதலின் போதும் அவர் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். செந்தில், சுரேந்திரன், கபிலன் என மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர் சுலைமான் தவிர மற்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு பின் நீதிமன்றத்தில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்தனர்.

அனீபா, அப்துல்லா இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும். கபிலன், சுரேந்திரன், செந்தில் மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பின் விளைவுகளைத் தடுக்க தொலைத் தூரங்களில் தங்கிக் கையெழுத்திடச் சொல்வதே வழக்கம். ஆனால் இங்கோ ஒரே ஊரில் அருகருகே கையெழுத்திடச் செய்ததோடன்றி இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து நிபந்தனையை மாற்றிக்கொள்ள ஆணை பெற்றும் தென்காசி குற்றவியல் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கையெழுத்திட வரும் இருதரப்பினரும் பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் வருவது என்கிற நிலையில் செந்தில் முதலானோருக்கு நிபந்தனை ஜாமீன் ரத்தாகிறது. சென்ற அகஸ்டு 13 அன்று கையெழுத்திட வந்த முஸ்லீம்களைச் சோதனை செய்து, வீடியோ படம் எடுத்து இனி துணை ஆட்கள் வரக் கூடாது , ஆயுதங்கள் எதுவும் கொண்டு வரக் கூடாது எனக் காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த நாள் அவர்கள் கையெழுத்திட வரும்போது வேண்டுமென்றே அவர்கள் தாமதிக்கப்பட்டு, பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக பரவலாக முஸ்லீம்கள் தரப்பில் குற்றம்- சாட்டப்பட்டது. அனீபாவும் மற்றவர்களும் திரும்பி வரும்போது அம்பாசிடர் கார் ஒன்றில் வந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் நாட்டு வெடிகுண்டு உட்பட பயங்கர அயுதங்களால் தாக்கியுள்ளனர். அனீபா தரப்பினரும் திருப்பித் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலும், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையில் மொத்தம் அறு பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் சேகர், சுரேஷ், செந்தில் அகிய மூவரும் குமார் பாண்டியனின் சகோதரர்கள். ஆக ஒரே குடும்பத்தில் நால்வர் கொல்லப்- பட்டுள்ளது பரிதாபமானது. கொல்லப்பட்ட இதரர்கள்: பஷீர், அசன் கனி, நாகூர் மீரான்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இம்முறை கலவரம் ஏதும் நடக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற கலவரங்கள் அனைத்திலும் முஸ்லீம்கள் தரப்பில் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. அவர்களது கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையும், வெளியிட்ட அறிக்கையையும் நடுநிலையாளர்கள் பாராட்டுகின்றனர். “தாக்க வந்தவர்களே தாக்கப்பட்டார்கள்” எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்குமுள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம். இந்து முஸ்லீம் என்கிற பிரச்சினை நீண்ட நாட்களாக குமைந்து கொண்டிருந்த போதும், அதற்குப் பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்த போதும் குமார் பாண்டியன் கொலைக்கும் இவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. குமார் பாண்டியனும் அவரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனீபாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும், ஒன்றாக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஏ.டி.ஜி.பி. சொன்னது போல, எதோ தனிப்பட்ட பகையே இதற்குக் காரணம் என்பதை எங்களால் அனுமானிக்க முடிந்தது. இருந்தபோதிலும் இது ஏதோ பள்ளிவாசல் தொடர்பான தகராறு என்பது போலப் பிற காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதும், ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதும் தவறானது. இந்து முன்னணியின் நோக்கத்திற்கே இது பயன்படக் கூடியது.

அதேபோல முன் குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுமே இதைக் குறிப்பிட்டனர். குமார் பாண்டியன் கொலையை ஒட்டி உடனடியாக அவர் மாற்றப்- பட்டுள்ளார். எனவே காவல்துறைக்கே அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது விளங்குகிறது. கையெழுத்திட வரும்போதுள்ள ஆபத்தான சூழலைப் பற்றி முஸ்லீம் தரப்பில் எழுத்து மூலமாகவே புகார் அளிக்கப்பட்டும் தற்போதுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், நிபந்தனையை மாற்றுவதற்கு இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்காததும் ஆறு பேர் கொலையுண்டதற்கு காரணமாக இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்காததோடு புகார் கொடுத்தவர்களையே அதிகாரிகள் திட்டியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காவல் நிலையத்தில் அனீபாவும் மற்றவர்களும் வேண்டுமென்றே காக்க வைத்து அனுப்பப்பட்டதாக முஸ்லீம்கள் தரப்பில் பரவலாக கருதப்படுகிறது. காவல்துறை இந்த ஐயத்தைப் போக்க உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் குழு கருதுகிறது.

தற்போதுள்ள துணைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஓர் இளைஞர். பொதுவாக இளம் அதிகாரிகள் ஊழலற்றவர்களாகவும், நடுநிலையாளர்- களாகவும் இருப்பது வழக்கம். நாங்கள் அவருடன் பேசியபோது எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லீம்கள் பலர் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் நிகழ்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று கூட ஊனமுற்ற ஒருவர் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தார். ஆறு பேர் கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது மட்டும் சதி செய்ததாக (120பி) குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இது எப்படி என எங்கள் குழுவிலிருந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் வினவியபோது, “இதுவே இறுதி அல்ல, விசாரணையின் போது மற்றவர்கள் மீதும் புதிய பிரிவுகள் தேவை எனில் சேர்க்கப்படலாம்” என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

இந்த பதில் எங்களுக்குத் திருப்திகரமாகவோ, ஏற்கக் கூடியதாகவோ இல்லை. அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, “இது சாதாரணப் பிரச்சினையல்ல. இதெல்லாம் தவிர்க்க இயலாது. நீதிமன்றம் இருக்கிறது தானே. அதில் தங்கள் குற்றமின்மையை நிறுவி அவர்கள் வெளியே வந்து கொள்ளட்டும்” என அவர் கூறியதையும் எங்களால் ஏற்க இயலவில்லை.

ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானி இன்று குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு காலம் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த துயர்களை யார் ஈடுகட்ட இயலும்?

“பயங்கரவாதம்’ எனச் சொல்லி குடிமக்களின் வாழ்வுரிமைகளைப் பறிப்பதை எப்படி அனுமதிப்பது? அதிகாரிகள் மத்தியக் குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்த உணர்வூட்டப்படுதல் அவசியம்.

முஸ்லீம்களுக்கெதிரான இப்படியான ஒரு அணுகு முறை ஒரு காலத்தில் கோட்டைமேட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் விளைவை அடுத்த சில ஆண்டுகளில் கோவையில் சந்திக்கவில்லையா? தென்காசியும் கோவை அக வேண்டுமா? அரசும் காவல்துறையும் மிகவும் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறப்புக் காவல்படையை தென்காசியில் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி இருந்ததாகவும் சிலர் கூறினர். இது தேவையில்லை. அத்துமீறல்களுக்கே இது வழிவகுக்கும். சிறப்புப் படை இல்லாமலேயே அங்கு அமைதியை நிலைநாட்ட இயலும்.

இரு தரப்பிலும் தவறுகள் இருந்த போதிலும், இதை ஒரு மதப் பிரச்சினையாக மாற்ற முயல்வதும், மதவெறியைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் இந்து முன்னணித் தரப்பிலிருந்துதான். முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் தற்காப்பு நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம் அமைப்புகள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதில்லை.

மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்படுவதோடு இருதரப்பு சார்ந்த மத ஊர்வலங்களும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் தவிர அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து மக்கள் பிளவுறுதலைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். முஸ்லீம்களின் பஜார் பள்ளி வாசல் திருத்தப்படுதல் என்பது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கை. அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சித்து இரு தரப்பினரையும் கூட்டிப் பேசி பள்ளிக் கட்டிடத்தை கான்கிரீட்டாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வெட்டுக் காயங்களுடன் சிறையில் இருப்போருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசி சரக காவல் நிலையங்களிலும், ரெவின்யூ அலுவலகங்களிலும் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கினர் எல்லா மட்டங்களிலும் முஸ்லீம்களாக அமைதல் வேண்டும். முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இதை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து நின்ற பாஜக இத்தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாகத் தெரிகிறது. நாகர்கோயிலுக்கு அடுத்தபடியாக தென்காசியை இந்துத்துவக் கோட்டையாக மாற்றும் நோக்கில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று கொலையுண்டுள்ள இரு தரப்பினரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – இளைஞர்கள். இவர்களில் சிலரின் மனைவியர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். சிலர் கர்ப்பிணிகள்.

தென்காசி இன்னொரு கோவை ஆகக் கூடாது.

நன்றி: மக்கள் உரிமை

Thanks : Kosukumaran

மார்ச் 6, 2007

TMMK மீதான தென்காசி தாக்குதல் முழு விபரம்

Filed under: crime, Riyadh TMMK, rss assault, Thenkasi — முஸ்லிம் @ 7:32 பிப

நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்! படுகாயத்துடன் உயிர் தப்பினார்!


மார்ச் 2ஆம் தேதி மாலை நேரம்! தமுமுக தலைமையகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டெல்­ பேரணி குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களும் அப்போதுதான் முடிந்திருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி­ருந்து இரண்டாவது நாளாக மக்கள் டெல்­ பேரணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்!

அப்போதுதான் அச்செய்தி எதிர்பாராத வண்ணம் சுமார் 8:30 மணியளவில் தலைமையகத்திற்கு கிடைத்தது.

இரவு 8 மணியளவில் தென்காசியில் நெல்லை மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை சிலர் சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தொலைபேசி செய்தி பதறியது.

உடனடியாக தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இச்செய்தியை உறுதிபடுத்திக் கொண்டார். நெல்லை மாவட்டச் செயலாளர் பகத்சிங் முஹம்மது வும் தொலைபேசியில் நடந்த விவரங்களை கூறினார்.

சம்பவம் நடந்தது எப்படி?

டெல்­ பேரணி குறித்த ஏற்பாடுகளையும் பயண ஆயத்த வேலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மைதீன் சேட்கான், தனக்கிருந்த அச்சுறுத்தலை யும் பொருட்படுத்தாமல் தனியாகவே சுற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் சேட்கான் அவர்கள் அம்மன் சன்னதி தெருவில் செல்லப்பா உணவகத்திற்கருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை வழி மறித்து, ‘டெல்­க் காடா போறீங்க.. எப்படிப் போறீங்கன்னு… பார்ப்போம்டா…’ என வெறிக் கூச்சல் எழுப்பியபடியே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் சுதாரிப்பதற்குள் 9 வெட்டு களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் சேட்கான்!

கோழைகள் அப்போதும்கூட சேட்கானுடன் நேருக்கு நேராக நிற்காமல் அவரது முதுகில்தான் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர்! அப்போது மணி சரியாக 8.05.

மூன்று பேர் கொண்ட கும்பல்தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோட்டார் பைக்கில் வந்தவரை திடீரென குறுக்கே சைக்கிளை நிறுத்தி, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் பற்றிக் கூறிய நகர நிர்வாகி நெய்னா, பலமான வெட்டுகளுடன் தற்காப்புக்காக சேட்கான் அருகிலிருந்த செல்லப்பா ஹோட்டலுக்குள் நுழைந் திருக்கிறார். அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் உடனடியாக கூடிவிட வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.

சில நூறு அடி தூரத்தில் எதேச்சையாக நின்று கொண்டிருந்த சாதிக், மசூது உள்ளிட்ட தமுமுகவினர், விபரம் புரியாமல் அங்கு ஓடிவர அப்போதுதான் தாக்கப்பட்டது சேட்கான் எனத் தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக ஆம்புலென்ஸில் சேட்கானை ஏற்ற, பின்னால் பாதுகாப்பிற்கு ஒரு காரில் தமுமுகவினர் தொடர, மின்னல் வேகத்தில் ஆம்புலென்ஸ் நெல்லை அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. ஆம்புலென்ஸ் வாகனம் புறப்படும்போதே ‘நடுபல்க்’ என்ற இடத்தில் நின்று கொண்டு, சங்பரிவார தீவிரவாதிகள் ஆம்பு லென்ஸ் மீது கற்களை எறிந்துள்ளனர்!

மக்கள் கொந்தளிப்பு!

அதற்குள் தீயாய் செய்தி பரவ, தென்காசி பொதுமக்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் குழுமத் தொடங்கினர். சிலர் பேருந்துகளை உடைக்க.. நிலைமை விபரீதமானது. உடனடியாக தமுமுகவின் நகரச் செயலாளர் நெய்னா, வர்த்தகரணி சாதிக், ஆட்டோ சங்கத் தலைவர் பீர், தொழிலாளரணி மசூது ஆகியோர் பொது மக்களை கலைந்து போகச் கூறினர். கூட்டம் ஆவேசத்தில் கூச்ச­ட, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்கள், பொதுமக்களிடம் பேசி அமைதி காக்குமாறும், குற்றவாளி கள் விரைந்து பிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

அதன் பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு தென்காசியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செய்தி பரவ, கோப உணர்ச்சிகள் இயல்பாகவே வெளிப் பட்டன. ஆங்காங்கே தமுமுகவினர் மக்களை அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தயார் நிலை!

மறுபுறம் ஆம்புலென்ஸ் வாகனம் 40 நிமிடத்தில் சீறிக் கொண்டு அரசு மருத்துவ மனையை வந்தடைந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக சேட்கான் அவசர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தாழையூத்து பகுதிகளி­ருந்து தமுமுகவினரும் விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் அசோக்குமார்தாசும், மாவட்ட கலெக்டரும் மருத்துவமனைக்கு வந்து அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தினர்!

நள்ளிரவு ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவசர சிகிக்சையளித்தது. இறைவனின் பெரும் கிருபை யால் அபாயக் கட்டத்தைத் தாண்டி, சேட்கான் உயிர் பிழைத்து விட்டார்! அதன் பிறகே மருத்துவமனை வளாகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் பொதுமக்கள்!

மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கோவையிலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்து மக்களை அமைதிப்படுத்தினர்.

காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் மீது தொடுக்கப் பட்ட கொலைவெறித் தாக்குதலை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வருவார்!

ஃபாஸிஸத்தின் கோரக் கரங்கள் சேட்கானை குதறியிருக்கின்றன. தமுமுக தொண்டன் என்றுமே கோழையாக வீழ மாட்டான். இந்த சமுதாயத்திற்காக ரத்தம் சிந்துவதற்கும், உயிர் துறப்பதற்கும் அவனே முன்வரிசையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பான்.

இதுவரை சேட்கான் நெல்லை மாவட்டத் தமுமுக தலைவராக மட்டுமே வலம் வந்தார்! இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார்! இன்ஷா அல்லாஹ்!

நன்றி : தமுமுக இனையத் தளம்

Create a free website or blog at WordPress.com.